சேலம்: செட்டிச்சாவடி மற்றும் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஆகிய பல்வேறு ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியோடு இணைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதிகளின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியரசு தினமான நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைக்கும் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் தங்களது எதிர்ப்பை பொதுமக்கள் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் ரத்தாகிவிடும் , கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒன்று திரண்டனர். தொடர்ந்து செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இந்த தகவல் அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார். அவர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரை சந்திக்க முயன்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் சட்டப்பேரவை உறுப்பினரையும் பொது மக்களையும் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து, காவல்துறையை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அருளுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்க வந்த போது சட்டப்பேரவை உறுப்பினர் என்றும் பாராமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பின்னர், காவல் துறை அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆட்சியரை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மனுவினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக எம்எல்ஏ அருள், 'சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட செட்டிச்சாவடி மற்றும் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதிகளை மாநகராட்சியோடு இணைக்க கூடாது. அவ்வாறு இணைத்தால் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசி உள்ளேன். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.