சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாணவர்கள், பெற்றோர் அச்சம் அடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியருடன் உரையாடவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த தீர்க்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார்.
ஆய்வின்போது பல்கலைக்கழக பதிவாளர், மூத்த பேராசிரியர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் ஆளுநர், மாணவர்களிடம் தனியாகவும், மாணவிகளிடம் தனியாகவும் கலந்துரையாடினார். பல்கலைக்கழக வளாகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துகள், பரிந்துரைகள், ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், “பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் நலனே பிரதானமானது,”என்று கூறினார். மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும் மேலும். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்தவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்,”எனக் கூறப்பட்டுள்ளது