சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ''மருத்துவத்துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை முறைதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. முனைவர் அனந்தகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்டபடிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆற்றிய உரை.#NEET pic.twitter.com/7gbUiHOpRL
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 28, 2024
பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது.
ஆனால், 2017 ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறி ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பதென்பது எட்டா கனியாகி விட்டது. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்து வருகிறோம்.