திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை 1985ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது, யானைக்கு 56 வயது ஆகியுள்ள நிலையில் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வயது முதிர்வு பிரச்சினைகளால் காந்திமதி அவதிப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக யானை காந்திமதி யானைக்கு மூட்டு வலி தொடர்பான பிரச்சினைக்குளுக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மூட்டு வலி அதிகமானதால் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
இதனால், ஒரு மாத காலமாக யானை காந்திமதி இயலாமல் நின்றவாரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்று (ஜன.11) அதிகாலை யானை காந்திமதி படுத்து உறங்கியது. இதையடுத்து காலை அது மீண்டும் எழ முடியாமல் சிரமப்பட்டதால் உடனடியாக நெல்லை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா போட்ட அமெரிக்க பக்தர்கள்! வைரலாகும் வீடியோ
தொடர்ந்து, யானை காந்திமதியை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி கால்நடை மற்றும் வனத்துறை மருத்து குழுவினர் சிகிச்சை அளித்தனர். யானையின் உடல் நலம் தொடர்பாக மருத்து குழுவிடம் கேட்டபோது, “நீண்ட நாட்களாக நின்றவரே யானை இருந்துள்ளது. அதனால் மூட்டு மற்றும் தசைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. தேவையான மருந்துகள், சத்து உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் யானை வழக்கமான உணவையே எடுத்து வருகிறது. யானைக்கு உடல் நலம் சீராகும் வரை மருத்துவ குழு கண்காணிப்பில் தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
யானை காந்திமதிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது நெல்லையப்பர் கோயில் வடக்கு பிரகாரத்தில் பக்தர்கள் யாரையும் கோயில் நிர்வாகம் அனுமதிக்காமல், தடுப்புகள் கொண்டு அடைத்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.