தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில், வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம் ஆகிய ஐந்து பேர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
மேலும், கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்த முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தற்போது ஓய்வு பெற்றுள்ள பெருமாள் சாமியிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்கலாம்" - ஐகோர்ட் க்ரீன் சிக்னல்!