சென்னை: பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு சென்றார். விஜய் கிராமத்துக்குள் செல்ல தடை விதித்த போலீசார் அவரை மண்டபத்தின் முன்பு வேனில் இருந்து பேசுவதற்கு அனுமதித்தனர்.
கவனத்தை ஈர்த்த ராகுல் வீடியோ: பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மக்களிடம் பேசிய தவெக தலைவர் விஜய், "பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக, நீங்கள் உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டேன். அது என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்களை பார்த்து, பேசியே ஆக வேண்டும் என தோன்றியது. உங்களுடன் நிற்பேன் என சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் இங்கே வந்திருக்கின்றேன்.
ஒரு வீட்டுக்கு முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள்தான். அதனால்தான் உங்களைப் போன்ற விவசாயிகள் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு விட்டு என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது என தோன்றியது.
என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக, என்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசிர்வாதத்துடன் இங்கே இருந்து தொடங்குகிறது. விக்கிரவாண்டியில் எனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளைப் பற்றிக் கூறினேன். இயற்கை வள பாதுகாப்பு. சூழலியல், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம் என்ற கொள்கையை அறிவித்தேன். விவசாயிகள் நிலங்கள் கொள்கை பாதுகாப்பு தீர்மானம் என இரண்டாவது கொள்கையை அறிவித்தேன். இதையெல்லாம் ஓட்டு வாங்குவதற்காக சொல்லவில்லை.
சென்னையை வெள்ளக்காடாக்கும்: பரந்தூரில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்த தயங்க மாட்டேன். இந்த முயற்சியில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். விமானநிலையம் வரக்கூடாது என சொல்ல வரவில்லை என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். .
விமான நிலையம் வேண்டாம் என்றால் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதை கட்டி விடுவார்கள். அறிவியல் ஆய்வில் உலக வெப்பமயமாதல் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் விளைவாக சென்னை நகரம் ஒவ்வொரு ஆண்டும் தவித்து வருகிறது. சென்னை வெள்ளத்துக்கு காரணம் சென்னையை சுற்றி உள்ள சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் அழிக்கப்பட்டதுதான் காரணம் என்று ஆய்வு கூறுகிறது. 90 சதவிகித விளைநிலங்களை அழித்து கொண்டு விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று கூறும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசுதான்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் சுரங்கம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு நாங்களும் ஆதரவு தெரிவித்தோம். அதே நிலைப்பாட்டே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டா பட்டி மக்களைப் போன்றவர்கள்தான் இந்த பகுதி மக்களும் உள்ளனர். அரிட்டா பட்டிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அரசு பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. பரந்தூரில் விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாக புரநித்து வைத்திருக்கின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தீர்களே?:
ஆட்சியாளர்களு்க்கு ஒரு சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன். எதிர்கட்சியாக இருக்கும்போது சேலம் எட்டுவழி சாலையை எதிர்த்தீர்கள்? காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்? இதே நிலைப்பாட்டை இங்கே எடுக்க வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிராக இருப்பது என்ன நிலைப்பாடு? என எனக்கு புரியவில்லை.
உங்கள் நாடகத்தை பார்ததுக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாடடார்கள். உங்கள் வசதிக்காக விவசாயிகளோடு நிற்பதும், வசதி இல்லை என்றால் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்காமல் போவதும் என உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்புவது போல நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி என்பது எனக்குத் தெரியும். விவசாயிகள் இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு கொண்டு இனியும் சும்மா இருக்க மாட்டார்கள்.
மறு ஆய்வு செய்ய வேண்டும்:
பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயத்துக்கு பாதிப்பு குறைவாக உள்ள இடத்தில் இந்த திட்டத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி என்பது முன்னேற்றம் தான். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் பேரழிவு தடுக்கப்பட வேண்டும்.
பரந்தூர் மக்கள் கொல்லப்பட்டால் அம்மன், எல்லைய்ம்மன் ஆகிய குலதெய்வங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் வீட்டு பிள்ளளையான நானும், தவெக தோழர்களும் சட்டத்துக்கு உட்பட்டு உங்களுடன் துணை நிற்போம். உங்கள் ஊர் திடலில் வந்து உங்களுடன் பேச எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஏன் உங்கள் ஊருக்குள் வர தடை எனத் தெரியவில்லை? அண்மையில் நோட்டீஸ் கொடுத்த தவெக தொண்டர்களை தடுத்தனர். இவ்வாறு ஏன் செய்கின்றனர்? என்று தெரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்,"என கூறினார்.