மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் சந்திரபாடி என்னும் மீனவ கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஐந்து கோயில்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதாவது, பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ பிடாரியம்மன் கோவில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோவில் ஆகிய ஐந்து கோயில்களையும் கிராம மக்கள் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். இந்நிலையில், அந்த ஐந்து கோயில்களையும் பழமை மாறாமல் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விமரிசையான கும்பாபிஷேகம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதலில் யாகசாலை அமைத்து, அதில் புனித நீர் அடங்கிய கடங்கள் நேற்று கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணஹூதி செய்யப்பட்ட நிலையில் திறக்கவிருக்கும் கோயிலின் சாமி சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று முதலில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயிலை வலம் வந்தனர். பின், கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் காளியம்மன் கோவில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ பிடாரியம்மன் கோவில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில் ஆகிய கோயில்களின் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இறுதியாக மகாதீபாராதனை காட்டப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை சமத்துவ மீன்பிடித் திருவிழா; கொண்டாட்டத்தின் ட்ரோன் காட்சிகள்!