தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் 4 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. அதில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை வழங்குவதில், தொடர்ந்து 3வது முறையாகத் தமிழ்நாட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதனைப் பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் சீர்வரிசை எடுத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவினை மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பழங்கள், இனிப்புகள், மலர்மாலைகள் கொண்ட சீர்வரிசைத் தட்டுக்களை மேளதாளம், தப்பாட்டம் முழங்க, சுகாதார மருத்துவத்துறை பணியாளர்கள் தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு சென்று கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தைச் சென்றடைந்தனர்.
இந்த விழாவில், டாக்டர் முத்துக்குமாருக்கு மலர் கிரீடம் சூட்டப்பட்டது. தொடர்ந்து 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருக்கு அவர்களது சேவையைப் பாராட்டும் விதமாக மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி மேயர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் புறநோயாளிகள் வருகை, உள்நோயாளிகள் அனுமதி, பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் / மார்பக மற்றும் கருப்பை வாய் பரிசோதனை, இரும்புச் சத்து மாத்திரை வழங்குதல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களிலும் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆரம்பச் சுகாதார நிலையமானது மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கடந்த 1967ஆம் ஆண்டு நகராட்சி மருந்தகமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில், சராசரியாக 60 முதல் 70 கர்ப்பிணிப் பெண்கள் பங்கு பெற்று ஆலோசனை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 580 சுகப்பிரசவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்த சுகாதார நிலையத்திற்கு, டெல்லி மருத்துவக் குழுவினர் வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டு தேசிய தர உறுதிச்சான்று மற்றும் ரூபாய் 3 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?