நாமக்கல்: குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சில வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் 30 வாகனங்களில் சென்று அந்த கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று சேலம் மாவட்ட எல்லையில் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில், அதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர்.
பின்னர் அவர்களை பிடித்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும், ஏடிஎம் இயந்திரம், சொகுசு கார் மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்யவும்