சேலம்: ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருவிழாவில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் தீ வைக்கப்பட்டதால் இன்று (மே.02) அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணாப்படுகிறது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இத்தனை ஆண்டுகளாக இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே தலைமை ஏற்று நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு பிரிவினர், இந்த ஆண்டு திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் எனக் கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (மே.02) இருதரப்பு பிரதிநிதிகளையும் அழைத்து, ஓமலூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் காணப்படாததால், இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள், தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடைகள் மீது கற்களை வீசி, தீ வைத்ததாக கூறப்படுகிறது. கலவரம் குறித்த தகவல் அறிந்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தடியடி நடத்தி, அப்பகுதியில் இருந்து கலையச் செய்தனர்.
இதை தொடர்ந்து மற்றொரு பிரிவினர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடைகள் மீது கற்களை வீசிய நபர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீ வைக்கப்பட்ட கடைகளில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவட்டிபட்டியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவிழாவின் போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் சேலம் மாவட்டப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.