திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூரைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் ராசு (67). இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் (60) அப்பகுதியில் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து, விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவர் தனியாக வசித்து வரும் நிலையில், கடைசி மகன் மருதுபாண்டி என்பவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும், இரண்டாவது, மூன்றாவது மகன்கள் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில், இரண்டாவது மகனின் மனைவி ஜெயலலிதா என்பவருக்கும், மாமனார் ராசு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனை அடுத்து, நேற்று (வியாழக்கிழமை) நடந்த தகராறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதில் ஜெயலலிதாவின் தந்தை முருகேசன் என்பவரையும், அவரது மகன் அருண்குமார் என்பவரையும் ராசு குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கோபமடைந்த முருகேசன் மற்றும் அவரது மகன்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, நேற்று நள்ளிரவு நேரத்தில் ராசுவின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, ராசு, மருதுபாண்டி, பாண்டியம்மாள் மற்றும் பாண்டியம்மாளின் சகோதரர் மலைச்சாமி உட்பட 4 பேரையும் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் தலைமையிலான காவல்துறையினர். படுகாயம் அடைந்த ராசு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் ராசு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காணாமல் போன சென்னை பெண் கொலை! சைக்கோ கொலையாளியா?