திருச்சி: தமிழக காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10 ஆம்தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
ஆனால், இதுவரை அவர் எங்கு இருக்கிறார்? என்ற தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது மனைவி ஜேன் ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "எனது கணவரை கைது செய்த பின்னர், இதுவரை அவர் எங்கே இருக்கிறார்? என்ற தகவலும் இல்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால், இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை.
எனது கணவரை கைது செய்த திருச்சியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் என்னிடம், 'அவரை கைது செய்துள்ளோம். விரைவில் திருச்சிக்கு கொண்டு வரப்படும்' எனத் தெரிவித்தார். அதன் பிறகு, எந்தவித தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விவரங்களையும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக, சென்னை டிஜிபி அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
திருச்சி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். கைது செய்வதில் தவறில்லை; ஆனால், 48 மணி நேரம் மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ஆட்கொணர்வு மனு' தாக்கல் செய்ய உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு மகன்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!