புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கு மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டுள்ளது.
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி மரணித்த ஜகபர் அலி, அ.தி.மு.க கட்சியை சார்ந்தவர் ஆவார். பல ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் இவர், அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், புகார் மனுக்கள் அரசு அலுவலகங்களில் இருந்து கசியவிட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஜனவரி 17 வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். ஆனால் வரும் வழியிலேயே, டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி மரியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை, குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டம் ரத்துன்னு அண்ணாமலை சொன்னா எப்படி? அமைச்சர்ல சொல்லணும்! - அரிட்டாபட்டி மக்கள் கேள்வி
மேற்கொண்டு நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு ஜகபர் அலியை விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்தது அம்பலமானது.
ஒருபுறம் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது. மற்றொருபுறம், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளை கனிமவளத் துறை அலுவலர்கள் அளவிட்டனர்.
இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இன்றுடன் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தது எனவும், சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டை கனிமவளத்துறை இணை இயக்குநருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நேரத்தில், ஜகபர் அலி படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.