திண்டுக்கல்: திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா இன்று (ஏப்.06) பழனி பகுதியில், பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும், குதிரை வண்டி இயக்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் வேட்பாளர் திலகபாமா, தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் இன்று (ஏப்.06) காலை முதல் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர் சிலை, பேருந்து நிலையம், பாலசமுத்திரம், பாப்பம் பட்டி, நெய்காரபட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அவர் அங்குக் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், “மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தை, திமுக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டம் என மாற்றி வருகிறது. சாராயக்கடையை திறக்க முயற்சிப்பவர்களை துரத்தி விட வேண்டும். பழனி அடிவாரப் பகுதியில் கிரிவலப் பாதையில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை”, என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாமானியர்களுக்குப் பிரச்சனை என்றால் கம்யூனிஸ்ட் ஓடி வருவார்கள், ஆனால் இப்போது இருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வேற மாதிரி உள்ளனர். நேற்று பழனி அருகே உள்ள ஆயக்குடியில் ஆதிதிராவிடர் நல விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் காயம் அடைந்துள்ளனர், கட்டிடங்கள் கட்டுவதில் திமுக அரசு ஊழல் செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களுக்கான திட்டங்களைச் செய்யாதவர்களைத் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள். எப்போதும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று பாமக பாஜக கூட்டணி தான். திண்டுக்கல் தொகுதியின் அமைச்சர்களைத் தூக்கி எரிந்து விட்டு மாம்பலம் சின்னத்தில் வாக்களியுங்கள்”, என பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதியில் உள்ள கடைகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று, பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும், பின்னர் குதிரை வண்டியை இயக்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.