சென்னை: சென்னை சேலையூரை சேர்ந்த சத்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "திமுக தொடங்கப்பட்டு 1967 ஆம் ஆண்டு அண்ணாதுரை தமிழகத்தில் ஆட்சி பெறுப்பேற்ற பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை அனைவரும் குறிப்பிட்ட ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அண்ணாவிற்கு பிறகு திமுக தலைவர் மற்றும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதே நடைமுறையை கடைபிடித்தார். 2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தமிழர்களின் அடையாளமான வேட்டி சட்டையையே தொடர்ந்து அணிந்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, தமிழகத்தில் ஆட்சியை கைபற்றிய நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெறும்பான்மை வாக்குகளுடன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், டிசம்பர் 2022 ஆம் ஆண்டு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பெறுப்பேற்றார்.
2024 செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழக துணை முதலமைச்சராக பெறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சாதாரண காலணியை உபயோகித்து வருகிறார். தமிழக செயலக அலுவலக திருத்தப்பட்ட அரசாணை 2019ன் படி, அரசு அலுவலர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு அலுவலர்கள் அலுவலக கண்ணியத்தை காக்கும் வகையில் பார்மல் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்களாக இருந்தால் புடவை, சல்வார் கம்மீஸ், துப்பட்டாவுடன் சேர்த்து சுடிதார் அணிய வேண்டும். ஆண்கள் பேண்ட் சட்டையும், வேட்டியும் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக நேரிங்களில் ஆடை கட்டுப்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், துணை முதலமைச்சராக பொறுப்பேற்று தனது அரசு அலுவலக பணியை செய்து வரும் உதயநிதி ஸ்டாலின்
அலுவலக ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட டீசர்ட்
அணிந்து கலந்து கொள்கிறார். அலுவலக விதிகளுக்கு எதிராக திமுக சின்னம் பொறித்த ஆடைகளை அணிவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே ஆடை கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.