தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் கணேசன் (வயது 56). மனைவி மாலா. இவரது வீட்டில் 25 அடி உள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்ய நினைத்த கணேசன், இதற்காக அவரது உறவினர் மூவரை அழைத்துள்ளார்.
அதன் படி அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பவித்ரன், ஜேசுராஜன் மற்றும் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (36) ஆகியோர் வந்த நிலையில், நேற்று பிற்பகல் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலாவதாக கிணற்றினுள் கணேசன் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய கணேசன் வெகு நேரமாகியும் மேலே வராததை தொடர்ந்து, அடுத்ததாக மாரிமுத்து இறங்கியுள்ளார்.
அவரும் மேலே வராதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பவித்ரன், ஜேசுராஜன் அவர்களும் கிணற்றினுள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கிணற்றினுள் இருந்து அவர்கள் அலறியதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆக்சிஜன் உதவியுடன் கடும் சிரமத்திற்கிடையில், கிணற்றில் இருந்த கணேசன், மாரிமுத்து, பவித்ரன், ஜேசுராஜன் ஆகியோரை மீட்டனர்.
இதில், மயக்க நிலையில் இருந்த பவித்ரன், ஜேசுராஜன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் இவர்களது உடல்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கிணற்றின் அருகே வீட்டு கழிவுநீரும் தேங்கிருப்பதால் விஷவாயு ஏதும் தாக்கி இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Join ETV Bharat Tamil Nadu WhatsApp Channel Click here](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-08-2024/22128917_card.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தலைத்தூக்குகிறதா பைக் ரேஸ் கலாச்சாரம்? பலியான காவலர் - police died hit by race bike