திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்து பலப்பல்நத்தம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்தவர் அனுமாக்காள் என்ற 80 வயது மூதாட்டி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஆனால், மூவரும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், மூதாட்டி அனுமாக்காள் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி மூதாட்டி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, வேலூரிலிருந்து மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு சோதனை செய்தது. பின் வாணியாம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் தலைமையில் தனிப்படை ஒன்று அமைத்து, கொலையாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையின் போது, மூதாட்டியின் மகனான சிவராஜ் என்பவரின் மனைவி மலர் மற்றும் அவரது மகன் சிவக்குமார் சந்தேகத்திற்கிடமாக பதில் கூறிய நிலையில், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மூதாட்டியின் ஒன்றறை சவரன் தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் அன்று மூதாட்டி அனுமாக்காளை கொலை செய்ய எண்ணிய அவரது மருமகள் மலர் மற்றும் பேரன் சிவக்குமார் மூதாட்டியை தாக்கி விட்டு, அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி மூக்குத்தி, காதில் அணிந்திருந்த ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கால் காப்பினை கொள்ளையடித்துச் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக திருப்பத்தூர் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. மருமகனை கொல்ல முயன்ற மாமனார் குண்டர் சட்டத்தில் கைது.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? -