விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர், நென்மேனி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இதன் விளைவாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு, மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு கூறியது போல் வழங்கவில்லை. மத்திய அரசு நிதி வரும்பட்சத்தில் நிவாரண உதவி உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். முதல்வர் பிரதமரிடம் போனில் பேசியதன் விளைவாக மத்திய ஆய்வு குழு வெள்ள பாதிப்பை பார்வையிட்டு வருக்கிறார்கள்.
மத்திய ஆய்வு குழு ஆய்வானது நேற்றும் நாளையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு குறித்த விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதையடுத்து தான் ஆய்வு பாதிப்பிற்கு ஏற்ற நிவாரண ஒதுக்குகிறதா? என தெரிய வரும். அன்றைய அரசியல் முதல் இன்றைய அரசியல் வரை திமுகவையும், கருணாநிதியும் இழுக்காமல் அரசியல் இருக்காது. தமிழகத்தின் அரசியல் புள்ளியாக இருப்பது திமுக கட்சியும், கருணாநிதியும். அதனால் தான் இன்றைக்கும் புதிதாக கட்சி தொடங்கியுள்ளவர்களும், பழைய கட்சியில் உள்ளவர்களும் முதலமைச்சரை மைய புள்ளியாக வைத்து பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் கையாடல் செய்த பெண் கணக்காளர்! சிக்கியது எப்படி?
விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். கள நிலவரம் அவருக்கு சரியாக தெரியாது. விஜய் சினிமா ரசிகர்களை நம்பி, அவதூறாக பேசுவது, ஒரு அரசியல்வாதியின் நாகரீகமாக இருக்காது. திமுகவை பொறுத்தவரை 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான களப்பணியை மேற்கொள்வோம்.
வேங்கை வயல் குறித்து பேசும் விஜய் அங்கு நேரில் சென்று அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாரா? செய்தியாளர்கள் வரும் நேரத்தில் பத்திரிகை செய்தியாக்கி விட்டு செல்கிறார்கள். அக்கறை உள்ளவர் நேரில் சென்றிருக்க வேண்டும். தற்போது கூட விஜய் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்யாமல் கல்யாண மண்டபத்திற்கு மக்களை அழைத்து உதவியை வழங்குகிறார்.
ஆனால் எங்களது முதல்வர் மழை வெள்ளத்தில் வேஷ்டியை மடித்துக்கொண்டு, களத்தில் இறங்குபவராக உள்ளார். விஜய்யை திமுக அரசியல்வாதியாகவே பார்க்கவில்லை. அவரைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. முதலமைச்சர் கூறியதை போல் எங்கள் பணியை மேற்கொண்டு 200 என்பது தற்போது 234ஆக உயர்ந்துள்ளது, வெற்றிதான் எங்களது குறிக்கோள், எந்த பக்கத்தில் இருந்தும் எழும் விமர்சனங்களை நாங்கள் கேட்க போவதில்லை” என்றார்.