சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் முதல் சிறுசேரி வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
அதன் அடிப்படையில், இந்த மூன்று வழித்தடங்களில் தற்போது, பல்வேறு, இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1கி.மீ-க்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேபோல், 76-கி.மீ உயர்மட்ட பாதையில், 80 ரயில் நிலையங்களும் மேலும் இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனையும் அமைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணிகள் எல்லாம் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சென்னையில், பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் II, வழித்தடம் 4-இல் பெலிகன் என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும் பணியைத் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ இரயில் சேவையைச் சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்குப் பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு, 3 வழித்தடங்களில் 119 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் 9 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வழித்தடம் 4 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் 10 கி.மீ நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னையின் பழமையான பகுதிகளான மயிலாப்பூர், கச்சேரி சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்குச் செல்கிறது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள், இரண்டு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு (UG-01 – கலங்கரை விளக்கம் முதல் பாரதிதாசன் சாலை வரை & UG-02 - பாரதிதாசன் சாலை முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் வரை) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த வழித்தடத்தில் நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன (Flamingo, Eagle, Peacock and Pelican). ஃபிளமிங்கோ மற்றும் ஈகில் ஆகிய இயந்திரங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை நோக்கி சுரங்கம் தோண்டும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளது. பீகாக் மற்றும் பெலிகன் ஆகிய இயந்திரங்கள் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்குகின்றன" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!