சென்னை: திருச்சி மகளிர் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தனது தாய் மைதிலியை வேலூருக்கு மாற்றக் கோரி அவரது மகள் சரண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கைதியிடம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு சிலைக்கு மாற்ற முடியாது என்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறைக்கு போதைப் பொருள் எப்படி வந்தது? என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையில் கைதிகளுக்கு வசதிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளது என சுட்டிக் காட்டினார்.
மேலும், கைதிகளைப் பாரபட்சமாக நடத்துவதால் சிறைக்குள் பிரச்சினை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டப்படி அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர். சிறைக்குள் குற்றங்களில் ஈடுபடும் கைதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைச் செப்டம்பர் 18ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.