சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் எனவும், யுஜிசி பிரதிநிதியுடன் அப்பல்கலைக்கழக வேந்தர் அமைத்த தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிமுறைகள், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் பல்கலைக்கழக வேந்தர், தமிழக அரசு, செனட் மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆளுநரின் பிரதிநிதியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட 4 பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேடுதல் குழு தொடர்பாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டிருந்தது. துணைவேந்தர் தேடுதல் குழு குறித்த இந்த அரசாணையில் வேண்டுமென்றே யுஜிசி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும்.
எனவே, யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்." என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.