மதுரை: மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட 130 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், "சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைத்து நபர்களுக்கும் இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் எடுக்கப்படவில்லை. தொழிலக பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். 2013 ஆம் ஆண்டு கொணரப்பட்ட விதியும் இதனை உறுதி செய்கிறது".
"இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் கனரக இயந்திரங்களும், காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகளை செய்து தராமல் 1997ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: உண்மைகளை மறைத்து பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்!
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியே கிளாட் ஆகியோர் முன் இந்த வழக்கு இன்று (டிச.5) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "தொழிலக பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்துதல் விதிகளின் படி மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு வசதிகளை செய்து தர வேண்டும்" என வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத் தரப்பில், "2013ஆம் ஆண்டே அந்த விதி நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக தமிழக வருவாய் துறையின் முதன்மைச் செயலர், நில நிர்வாகப் பிரிவின் இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.