மதுரை: மதுரையைத் தலைமை இடமாகாக் கொண்டு நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்துச் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். இரட்டிப்பாகத் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பலரும் முதலீடுகளைச் செய்துள்ளனர். ஆனால், கூறிய படி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட சிலரைக் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து, ஜாமீனின் வெளியே வந்த இவர்கள் தற்போது வழக்கை நீர்த்துப் போகும் விதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி விருதுநகரைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பி செல்வன், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 26 நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிமாற்றங்கள் முழுமையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த பணம் 40 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, "இது போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளை விடப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு.
முதல்முறையாக நியோமேக்ஸ் வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது வினோதமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்துவிடக்கூடாது. மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பித்துவிடலாம் என்ற நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும். நிதி நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, "நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க உள்துறை செயலகத்துக்கும், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது" என்று கூறிய நீதிபதி, "நிதி நிறுவனங்களின் மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபடுபவர்களின் வழக்குகளை விசாரிக்கத் தனியாகச் சிறப்புப் புலனாய்வுக்குழுவை அரசு நியமிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
மேலும், நியோமேக்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள பண விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 21-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: “இரட்டை இருந்தால் போதும்” - ஓபிஎஸ் போடும் சின்னம் கணக்கு?