மதுரை: மதுரையைச் சேர்ந்த லாசர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நான் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் நான் தினக்கூலியாக ரூபாய் 500 ரூபாய் பெற்று வருகிறேன்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எனது நிறுவனத்தில் இரவு பணிபுரிந்து விட்டு அதிகாலை 2.30 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையம் அருகே எனது இருசக்கர வாகனத்தில் வந்த போது அந்த பகுதியில் போலீசார் இரு சக்கர வாகன ஆய்வு மேற்கொண்டனர்.
எனது வாகனத்தைச் சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் மற்றும் காவலர் ராம சரவணன் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர். எனது வாகனம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன், இருப்பினும் என்னிடம் 1,000 ரூபாய் கேட்டார்கள். கொடுக்க மறுத்துவிட்டேன்.
இதனால் காவலர் ராம சரவணன் என்னைத் துன்புறுத்தினார். பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவதாகவும் மிரட்டினார். பின்னர் எனது பாக்கெட்டில் இருந்த சம்பளப் பணமான ரூ.1,400யை சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் எடுத்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான், இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் கடந்த 2017ஆம் ஆண்டில் புகார் செய்தேன்.
மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணை செய்து சார்பு ஆய்வாளர் ரத்தினவேல் மற்றும் காவலர் ராம சரவணன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு உள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட எனக்கு 20 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கத் தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் எனக்கு இழப்பீடு வழங்க மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதுநாள் வரை எனக்கு எவ்வித இழப்பீடு தொகையும் வழங்கவில்லை. எனவே, எனக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் மனுதாரரின் வங்கி விவரங்களை உடனடியாக பெற்று இரண்டு வாரங்களில் அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூபாய் 20,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனு!