மதுரை: திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகன் கலையரசன் மணப்பாறை அருகே உள்ள மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு மணப்பாறை அரசு மருத்துவமனை பழைய கட்டிடத்திற்கு மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
எனது மகனை அங்கு சுத்தப்படுத்தும் பணிக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு இருந்த கெட்டுப்போன பழைய மருந்துகளையும், கழிவுகளையும் குப்பைகளுடன் சேர்த்து எரித்து உள்ளார். மருந்து பாட்டில்கள் வெடித்து அதில் இருந்த ரசாயனம் எனது மகன் உடலில் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்து விட்டார்.
மருத்துவக் கழிவுகளை முறையாக அதிகாரிகள் அப்புறப்படுத்தாதது தான் என் மகனின் சாவுக்கு காரணம். இதற்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரர் மகன் இறந்ததற்காக அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்தை மனுதாரரின் மகளுக்கு நேரடியாகவும், மீதத் தொகையை மனுதாரரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.