சென்னை: சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை வணிகவியல் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஶ்ரீரிஷ். இவருக்கு வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளதால், கல்லூரி நிர்வாகம் அவர் செமஸ்டர் தேர்வெழுதவும் 2024-2025 கல்வி ஆண்டுக்கான வகுப்பை தொடரவும் அனுமதி இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து கல்லூரி மாணவர் ஶ்ரீரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கு: இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஶ்ரீரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் இந்த மனு மீது விசாரிக்க மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று பிப்ரவரி 20-ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் ஶ்ரீரிஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மாணவரை தேர்வெழுத அனுமதிக்கும்படி நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது: மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தனர். மேலும் கல்வி சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அதை பொருட்படுத்துமாறு கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து உத்தரவு வழங்கி நீதிபதிகள் குறிப்பிட்ட அளவு வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத முடியாது. இது பல்கலைக்கழக மானியக்குழு கூறும் வழிமுறைக்கு எதிரானது. மேலும், வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களின் நிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் இருக்கும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி வழங்கப்பட்ட நோட்டீஸ்: 30 பேர் மீது வழக்கு!
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: பெண் காவலருக்கு மட்டும் தண்டனை விதித்ததை ஏற்க முடியாது! உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
மேலும், மாணவர் உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர விரும்பனால் அதற்கு பல்கலைகழகம் அனுமதியளிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் மாணவர் ஶ்ரீரிஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.