சென்னை: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் அமரன். இப்படம் கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்தது. நடிகை சாய் பல்லவி (கதாநாயகி) தமது செல்ஃபோன் எண் என்று குறிப்பிட்டு ஒரு எண்ணை துண்டு சீட்டில் எழுதி கதாநாயகனிடம் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில், இந்த செல்போன் எண் இடம்பெற்றுள்ள காட்சி தற்போது விவகாரமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போரூர் தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த வாசீகன் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தில் எனது கைபேசி எண்ணை நடிகை சாய் பல்லவியின் எண்ணாக படத்தில் காண்பிக்கப்பட்டு காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின் குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்த
காட்சிகள் நீக்கப்படாததால், தொடர்ந்து அழைப்புகள் வருகிறது.
இதையும் படிங்க : "அமரன் படத்தில் பகிரப்படும் மொபைல் எண்" - 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் சென்னை கல்லூரி மாணவர்!
தனது எண்ணை அனைத்து ஆவணங்களுக்கும் இணைத்துள்ளதால் அதனை மாற்ற முடியாது. சினிமாவில் வரும் காட்சிகளால் தனிமனிதர்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அனுமதி வழங்குவதற்கு முன் தணிக்கைத் துறை உறுதி செய்ய வேண்டும்.
அதனால், தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். அமரன் படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெரிந்தே கைபேசி எண்ணை பயன்படுத்தி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமரன் படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காட்சியில் உள்ள கைபேசி எண் மறைக்கப்பட்டுள்ளது. புதிதாக தணிக்கை சான்றிதலும் பெறப்பட்டுள்ளது. தற்போது ஓடிடி தளத்திலும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் சமரச தீர்வு மையம் கிடையாது. படக்குழு சார்பில் காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி விசாரணையை டிச 20ம் தேதி தள்ளி வைத்தார்.