சென்னை: தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில் தச்சு தொழில் பிரிவில் உதவியாளர்களாக பணியாற்றிய தேவராஜ், சுரேஷ் ஆகியோரை காதியின் பட்டு சேலை, சோப்பு, தேன் விற்பனை பிரிவுக்கும், விற்பனை பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கும் மாற்றி காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குனர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தேவராஜும், சுரேஷும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எழுதப்படிக்க தெரியாத தங்களால் விற்பனை பிரிவை கவனிக்க இயலாது எனவும், சென்னையில் தச்சு தொழில் பிரிவு செயல்படாவிட்டாலும், திருநெல்வேலி, பள்ளிகொண்டா, அரக்கோணம், கள்ளக்குறிச்சி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் செயல்படும் தச்சு தொழில் பிரிவுக்கு தங்களை மாற்றலாம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, "பள்ளிப்படிப்பு தகுதியைக் கூட பெறாத மனுதாரர்களை விற்பனை பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும், தச்சர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள அவர்கள், அப்பதவிகளிலேயே நீடிக்க முடியும் எனக் கூறி, இருவரையும் விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னையில் தச்சு தொழில் பிரிவை புதுப்பித்து மனுதாரர்களுக்கு பணி வழங்கலாம் அல்லது பிற மாவட்டங்களில் செயல்படும் தச்சு தொழில் பிரிவுக்கு அவர்களை மாற்றலாம்" என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், சந்தை சக்திகள், உலகை ஆடம்பரத்துக்கு தள்ளுகின்றன.
அதே சமயம், நாட்டின் உன்னதமான ஆன்மாக்கள், எளிமை, காதியை ஆதரித்தன. அதற்காக ஆடம்பரத்தை நோக்கி செல்வதை தவறாக கூற முடியாது. இரு வாய்ப்புகளும் இருந்தால் தான் குடிமக்கள் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்ய முடியும்.
தேசத்தந்தை, காதிக்கு ஆதரவாக நின்றார். எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோரூம்களில், தற்போது பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் விற்கப்படுகின்றன என ஆதங்கம் தெரிவித்த நீதிபதி, இது சம்பந்தமாக உரிய முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு.. காவல் ஆய்வாளருக்கு ஜூலை 31 வரை சிறை! - MR VIJAYABHASKAR CASE