சென்னை : ஆன்மீகம், மனிதாபிமான சேவைகள் துறையில் ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றி செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
அதேபோல் சட்ட விதிகளை மீறி கோவை மாவட்டம், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவில் சட்டவிரோதமாக பல கட்டடங்களை கட்டி உள்ளார். இது தொடர்பாக வழக்குகளில் நீதிமன்றம் அந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், வெள்ளயங்கிரி மலைப்பகுதியை ஆக்கிரமித்து பள்ளிக்கூடத்திற்கான கட்டடத்தை சட்டவிரோதமாக கட்டி உள்ளார். இந்த சட்டவிரோத கட்டடங்கள் மீது கோவை மாவட்ட நிர்வாகமும் நோட்டீஸ் அளித்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜக்கி வாசுதேவ்-க்கு இந்திய அரசின் பாரத ரத்னா விருதிற்கு அடுத்து மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கியதை திரும்ப பெற வேண்டும்" என மனுவில் கூறி இருந்தார்.
இதையும் படிங்க : ஈஷா யோகா மையம் விவகாரம்; மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்!
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வெங்கடசுவாமி பாபு மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் ஆஜராகி, ஜக்கி வாசுதேவ்-க்கு எதிராக எந்த ஒரு தவறான அறிக்கைகளையும், மத்திய புலனாய்வு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு பெறவில்லை என வாதம் வைத்தார்.
மேலும், மனுதாரர் எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தனிப்பட்ட காரணங்களுக்கான வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கருதுவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்