கடலூர்: கடலூர் அருகே உள்ள எம். புதூர் கிராமத்தை சரண்ராஜ் (21) மற்றும் டி. புதுரை சேர்ந்த அப்புராஜ் ஆகிய இருவரும் காணாமல் போனதாக கடந்த ஜனவரி 23ஆம் தேதி அப்புராஜ் பெற்றோரும், இந்த மாதம் சரண்ராஜ் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஊமங்கலம் அருகே இருவரது உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, நேற்று (பிப்.24) காவல்துறை சார்பில் வட்டாட்சியருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இன்று ஊமங்கலம் பகுதியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் முன்னிலையில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அதன் பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், சரண்ராஜ், அப்புராஜ் மற்றும் பால்ராஜ் ஆகிய மூவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி பால்ராஜ் மற்றும் நண்பர்கள் அப்புராஜ், சரண்ராஜ் என ஐந்து பேர் நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம் குவாரியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் சகோதரியை குறித்து அப்புராஜ் தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் லாரியில் இருந்த இரும்பு ராடை கொண்டு அப்புராஜை தாக்கியுள்ளார். அதை தடுக்க வந்த சரண்ராஜும் இரும்பு ராடால் தாக்கப்பட்டுள்ளார். இதில் இருவருமே உயிரிழந்தனர் என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை வழக்கில் தப்ப முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸ்; தூத்துக்குடியில் பரபரப்பு!
மேலும், இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், '' அப்புராஜ், சரண்ராஜ் இருவரும் நண்பர்கள் ஆவர். இவர்களும், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்ற லாரி ஓட்டுநர் உட்பட சிலர் ஜனவரி 22ஆம் தேதி ஊமங்கலம் குவாரியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாய் தகராறில் அப்புராஜ் மற்றும் சரண்ராஜை பால்ராஜ் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இதனால் பால்ராஜ் அவர்களை அங்கேயே மண் சரிவில் தள்ளி ஒரு லாரி மண்ணைக் கொட்டி மூடியுள்ளார். பால்ராஜ் கைது செய்யப்பட்டு கொலை சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக இருவரது உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், அப்புராஜ், சரண்ராஜ் இருவரது உடல்களுக்கும் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. ஒரே உரை சேர்ந்த நண்பர்கள் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் புதூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.