சென்னை: தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் 3 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களையும் சேர்ப்பதற்கும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
2024-2025ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரியச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்குக் குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், 2021 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்குக் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களின் வீடுகளிலிருந்து 1 கிலோமீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீதத்திற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் குறித்த விபரத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்ற விபரத்தை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பள்ளியின் அறிவிப்புப் பலகை மற்றும் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திலும் வெளியிட வேண்டும். https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் மே 28ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்த வேண்டும்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் 2013-2014ஆம் ஆண்டு முதல் இந்தச் சேர்க்கை தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65946 குழந்தைகள் உட்பட 3 லட்சத்து 51 ஆயிரத்து 122 சேர்த்து, மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
2023-24ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 883 குழந்தைகள் சேர்க்கப்பட்டுப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டிற்கு அரசால் 400 கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னையில் சிக்கியது எப்படி? - Chennai Airport