சென்னை: நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியந்து பார்த்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் தளத்தில் கடல் அலைகள் ஜொலித்ததைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதை படம்பிடித்தும் வீடியோவாக பதிவேற்றியிருந்தார். கடல் அலைகள் நீல நிறத்தில் தாவி வந்ததை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
Just now enjoyed the mesmerising Fluorescent waves at ECR beach!! #Bioluminescence pic.twitter.com/6ljfmlpyRO
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 18, 2024
ஏன் கடல் அலை நீல நிறத்தில் மிளிர்ந்தது?
இது பெரும்பாலும் கடல் உயிரினங்களால் நிகழ்கிறது. நீல நிறம் தவிர கடலில் இருக்கும் ஆல்கே மற்றும் தாவரங்களால், கடல் அலைகள் பச்சை நிறத்தில் ஜொலிப்பதுண்டு. அட்லாண்டிக் பெருங்கடலின் பெரும்பாலான இடங்கள் பச்சை நிறத்தில் காணப்படும்.
ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களில் குளோரோபில் இருக்கும். இது பச்சை நிறத்தில் தோன்றுவதுடன், சிவப்பு மற்றும் நீல ஒளியையும் வெளிப்படுத்துகிறது.
சிவப்பு நிறக் கடல்கள்:
சில கடல்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். கடலில் உள்ள சில பாசிக்கள் நச்சுகளை வெளியிடும்போது, கடல் அலைகள் இப்படி காட்சியளிக்கின்றன. ஆனால், பெரும்பாலும் இவை உயிரினங்களுக்கு தீங்கிழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மெக்சிகோவின் கரேனியா ப்ரீவிஸ், செசபீக்கில் உள்ள அலெக்ஸாண்டிரியம் மோனிலேட்டம் ஆகியவை சிவப்பு நிறப் பெருங்கடல்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும் கடல்கள்:
சில நேரங்களில் வானத்தில் அதிக மேகமூட்டம் இருந்தால், கடல் சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். அதுமட்டுமில்லாமல், நீருக்குக்கடியில் அதிகளவு வண்டல் மணல் இருந்தால், கடல் அலைகள் பழுப்பு நிறத்தில் சீறி வரும். இது பொதுவாக கடலில் கலக்கும் நதியின் நன்னீரின் தன்மையைப் பொறுத்தது என்கிறது ஆய்வு முடிவுகள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.