மதுரை: மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்தாண்டு அக்டோபர் 18 ஆம் தேதி நாளிதழில், ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பான செய்தி வெளியாகியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ஈஷா யோக மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அதற்கான மனு ரசீதும் வழங்கப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லலிதா குமாரி - உத்தரப்பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், ஈஷா யோக மையத்திற்கு எதிராக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக காவல்துறை தலைவர் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஈஷா யோக மையத்தில் நடைபெற்று குற்றங்கள் விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெறாத காட்சிகளுக்கு பதிப்புரிமை கோர முடியாது - நெட்பிளிக்ஸ் மனு!
இந்த மனு நேற்று (ஜன.22) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்குகளைப் பொருத்தவரை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வழக்குப் பதிவு செய்யவே இவ்வளவு காலதாமதம் ஆகிறது" என வாதிட்டார்.
தொடர்ந்து காவல்துறை தரப்பில், "5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்திற்காக தற்போது புகார் அளிக்கப்படுகிறது. ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நிர்மல்குமார், வழக்குகளின் நிலை குறித்து தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.