நாமக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 கன அடியை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் வீதி, சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளான ஜனதா நகர், நாட்டா கவுண்டன்புதூர், பாவடி தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.
இந்த பாதிப்புகளில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேரை நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் ஆகியோர் மீட்டு, அரசு ஏற்படுத்தியுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி திருமண மண்டபம், ஐயப்ப சேவா திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைமகள் வீதியில் உள்ள வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், "மேட்டூர் அணையிலிருந்து 1.80 லட்சம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குமாரபாளையம், பவானி, ஈரோடு, பள்ளிபாளையம், கொடுமுடி தாழ்வானப் பகுதிகளில் வசித்த பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கி உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஆற்றங்கரையோரத்தில் இருந்து வெளியேற மறுத்ததாக கூறினார். ஆனால், தற்போது மாற்று இடத்திற்குச் செல்ல தயாராக இருப்பதாக தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனை ஆளும் அரசிடம் வலியுறுத்தி அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நான்கு நாட்களாக ஆற்றின் இடையே சிக்கித் தவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவளிக்கும் அரசு!