சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியானது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், இந்த தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
முன்னதாக, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியை திமுக வெல்வதற்காக தீவிரமாக களப்பணி செய்து வருகிறது. அந்த வகையில், 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ், சி.வெ.கணேசன் மற்றும் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், விழுப்புரம் எம்எல்ஏ ஆர்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுநாள் (ஜூன் 14) விக்கிரவாண்டியில் நடைபெறும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் பங்கேற்பர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: தமிழர்கள் குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள் அறிவிப்பு - kuwait fire accident latest update