கோயம்புத்தூர்: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் “ஒரு நாள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி” நடைபெற்றது.
இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “ஊட்டச்சத்து மாதம் குறித்து இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத பட்சத்தில், அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வால்பாறை கலைக் கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டுமல்லாமல், மேலும் நான்கு பேர் மீது தற்போது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்துள்ளோம். இது போன்ற சம்பவங்களின் நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட உள்ளது.
மேலும், சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்விளக்குகளை அதிகரித்தாலே ஓரளவு பாதுகாப்பு மேம்படுத்தப்படும். இவ்வாறான சம்பவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தால் மக்களுக்கும், மாணவர்களுக்கு இது குறித்த புரிதல் கிடைக்கும்” என தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கோவைக்கு வருவதாக புகார்கள் எழுப்பப்படுவது குறித்தான கேள்விக்கு, “அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வந்தே பாரத் விழாவில் மதுரையைச் சேர்ந்த 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர்!