அரியலூர்: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களின் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று (புதன்கிழமை) மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வகையில், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் 22 வேட்பாளர்கள் 27 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதனை இன்று சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரியும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை பணிகள் நடைபெற்றது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுழற்சி வேட்பாளர்களான ராமுவ்காந்தி, பூரணகுமார், சாமிநாதன், சந்திரகாசி, ராஜேஷ் ஆகிய ஐந்து சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார்.
இதனையடுத்து, தற்பொழுது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களாக ஐந்து பேரும் சுயாட்சிகளாக 9 பேர் என மொத்தம் 14 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி மதியம் மூன்று வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெறலாம்.
அதன் பின்னர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியான பின்னர், வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அங்கீகாரம் மற்றும் சின்னம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறும்.
இதையும் படிங்க: "விஜயுடன் இணைந்து பணியாற்றத் தயார்" என்ன சொல்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்..!