திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராபர்ட் புரூஸ்சை எதிர்த்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சத்தியா உட்பட 25 பேர் களத்தில் இருந்தனர்.
அதேநேரம், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்று முடிவில் இருந்து கடைசி சுற்று வரை ராபர்ட புரூஸ் தான் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக, அவர் 5 லட்சத்து 2,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், நெல்லை தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு எதிராக பாஜக சார்பில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் களமிறக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை, ஏற்கனவே அதிமுகவில் அமைச்சர் பதவி உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், தற்போது அக்கட்சியில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும், நயினார் நாகேந்திரன் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நன்கு மக்கள் மத்தியில் அறியப்படக்கூடியவர்.
குறிப்பாக, நெல்லை தொகுதி முழுவதும் மக்களால் அறியப்பட்டவர் என்பதாலும், முன்னாள் அதிமுக அமைச்சர் என்ற முறையிலும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் வலுவான வேட்பாளராக பார்க்கப்பட்டார். அதேபோல், நிச்சயம் காங்கிரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் போட்டி ஏற்படுத்துவதோடு அவர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், நயினார் நாகேந்திரன் பெறவில்லை. வெறும் 3,36,676 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.
காங்கிரஸ் வெற்றிக்கு காரணம் என்ன? நயினார் நாகேந்திரன் வலுவான வேட்பாளராக இருந்தாலும் கூட நெல்லை தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல் வரலாற்றில் சாதி ரீதியாகவே வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். குறிப்பாக, நெல்லை தொகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவு வசிக்கின்றனர். மொத்தம் 16 லட்சம் வாக்காளர்கள் நெல்லை தொகுதியில் உள்ள நிலையில், இதில் நாடார் சமூக வாக்காளர்களே மெஜாரிட்டியாக உளனர்.
மொத்த வாக்காளர்களில் சுமார் 22 சதவீதம் பேர் (5,00,000) நாடார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக, இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் 30 சதவீதம் ( 13,13,384) வரை இருக்கின்றனர். இரண்டாவதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 15 சதவீதம் பேர் (2.50 லட்சம் பேர்) மூன்றாவதாக தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 12 சதவீதம் பேரும் (2.13 லட்சம்) யாதவ சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 9 சதவீதம் பேரும் (1.50 லட்சம்) முஸ்லீம் 8 சதவீதம் ( 1.30 லட்சம்) இருக்கின்றனர்.
நாடார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் பேர் இருப்பதால், இதுவரை நடந்த தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே நெல்லையில் களம் இறக்குகின்றனர். அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த நாடார் சமூக வேட்பாளர் ஞானதிரவியம் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.