சென்னை: பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 33 பேரிடம் மூன்று கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வேலைக்காகப் பணம் கொடுத்தவர்களை அழைத்து, ரூ.70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்குமூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அதில் மேல்விசாரணை நடத்தக் கேட்டு கொண்டதாகவும் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. ஊழியர் கைது!
அதுமட்டுமின்றி, கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனைப் பரிசீலித்து, மேல்விசாரணை நடத்தி விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இன்னும் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.