சென்னை: செல்போன் கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கிய நாள்களிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும் உலா வந்து கொண்டு இருக்கின்றது. அந்த வகையில்தான் சமீப நாள்களாக யூடியூபில் பிரபலமாக இருக்கும் இர்பானுக்கும், பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வரும் அபிஷேக் என்ற இளைஞருக்கும் இடையேயான மோதல் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
பிரச்சனை தொடங்கியது எங்கே? கடந்த ஆண்டு மே மாதம் இர்பானின் கார் மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மறைமலை நகர் அருகே சாலையைக் கடக்க முயற்சி செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த காரை இர்பான் ஒட்டி வரவில்லை எனவும், அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வீடியோ வெளியிட்ட பிரியாணி மேன்: இந்த விபத்து நடந்து ஒரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி பிரியாணி மேன் என்ற யுடியூப் சேனலில் அபிஷேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "இர்பான் இப்போதும் மட்டும் அல்ல கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
ஆனால் அதிலிருந்து அவர் எப்படி சுலபமாகத் தப்பித்து விடுகிறார் என பேசியிருந்தார். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இர்பான் காரால் ஏற்பட்ட விபத்து, மற்றும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது, மற்றும் அவர் ரிவ்யூ செய்த ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஆவேமடைந்த இர்பான்: பிரியாணி மேன் சேனலில் வீடியோ வெளியாகி 1 மாதம் கழித்து, அவர் வெளியிட்ட வீடியோவிற்கு பதில் தரும் விதமாக ஜூலை 21ஆம் தேதி இர்பான் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், "எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் என்மீது தவறான குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் வைத்துள்ளார்.
இதனை பற்றி பேசுவதற்கு அவரை தொடர்பு கொண்டாலும் அவர் போச மறுத்து விடுகிறார். நான் நினைத்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர முடியும், ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல" என பல்வேறு விஷயங்களுக்குப் பதில் தரும் விதமாக அந்த வீடியோவில் இர்பான் பேசி இருந்தார்.
தற்கொலை முயற்சி: இந்த பிரச்சனை ஒரு புறம் சென்றுக் கொண்டு இருக்க நேற்று, பிரியாணி மேன் யூடியூப் சேனலில் லைவ் செய்து கொண்டு இருந்த அபிஷேக், தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர்தான் காரணம் என்று கூறி விட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை லைவ்வில் பார்த்துக் கொண்டு இருந்த அவரது நண்பர்கள் சிலர், பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்ததாகவும், அதன் பேரில் அவர் வந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கைது செய்யப்படுவரா பிரியாணி மேன்? பொதுவாகத் தற்கொலை செய்ய முயற்சிப்பதே சட்டப்படி குற்றமாகும். தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இந்தநிலையில் சுமார் 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வைத்து இருக்கும் பிரியாணி மேன் சேனல் லைவ்வில் அபிஷேக் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சட்டம் சொல்வது என்ன?:தற்கொலை செய்து கொள்வதும், வீடியோ வெளியிடுவதும் சட்டப்படி குற்றமில்லையா? இதுகுறித்து சட்டம் சொல்வது என்ன? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
தற்கொலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்ப பிரச்சனைகள் தொடங்கி, கடன் தொல்லை, மன உளைச்சல், வேலையின்மை, ஆசிரியர் திட்டியது, செல்ஃபோனை பெற்றோர் கொடுக்கவில்லை என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்வதை பார்க்க முடிகிறது.
சிலர் சமூக வலைதளங்களில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவிட்டு பின் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ன் படி தனிமனிதர்களின் சுதந்திரமான நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது.
அதே நேரத்தில், தனிமதனின் தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால், தனிமனித உரிமையை பின்னுக்கு தள்ளி சட்டப்படி அது தவறு என்கிறது நமது இந்திய சட்டங்கள். தற்கொலை குறித்து பழைய சட்டங்கள் கூறியது என்ன? புதிய சட்டங்கள் கூறுவது என்ன? என சட்ட வல்லுநரும் மூத்த வழக்கறிஞருமான கே.எம் விஜயன் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.
"கடவுளின் உன்னதமான படைப்பான மனிதன் ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்வது என தீர்மானித்து, அதை வீடியோவாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ வெளிப்படுத்தினால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309ன்படி தற்கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முடியும்.
விசாரணையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது நிரூபிக்கப்பட்டால், 1 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்தது. ஆனால், 2023ல் கொண்டு வரப்பட்ட பாரதிய நியாய சன்கிதா சட்டத்தின்படி தற்கொலை செய்து கொள்வது குற்றமாக கருத முடியாது என அறிவித்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309-ஐ முழுமையாக நீக்கியுள்ளது.
தற்கொலையை குற்றமாக கருதி சட்ட நடவடிக்கை எடுப்பதால் மட்டும் தற்கொலை எண்ணத்தை மாற்றி விட முடியாது என்பதால் IPC 309 சட்டப் பிரிவை நீக்க 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன. அதற்கு பதிலாக தற்கொலைக்கு தண்டனை வழங்குவதை விட பாதிக்கப்பட்டவருக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதால் தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
தற்கொலையை தடுக்காமல் சட்டத்தை நீக்கியிருப்பது தற்கொலையை தூண்டிவது போலாகிவிடும் என ஒரு பக்கம் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், தற்கொலையை குற்றமாக கருதி தண்டனை வழங்கினால் மட்டும் தடுத்துவிட முடியாது. அந்த எண்ணத்தை பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதே சிறந்தது" என்று வழக்கறிஞர் கே.எம் விஜயன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் இளைஞரை துரத்திச் சென்று கொன்ற யானை.. இணையத்தில் பரவும் வீடியோ!