கோயம்புத்தூர்: கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருப்பதாக இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் மாவட்ட தோ்தல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி அனுமதி வழங்கி உத்தவிட்டாா். இதையடுத்து திட்டமிட்டபடி புத்தக வெளியீட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கோவை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில், ‘ப்ரொபஷனல் இன் பாலிடிக்ஸ்’ (Professional in Politics) என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கபட்ட நிலையில், இந்த நிகழ்விற்கு உதவி தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்திருந்தார்.
இதனையடுத்து,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்மராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்த உத்தரவை தேர்தல் நடத்தை விதிகளின்படி, மறுபரிசீலனை செய்து சனிக்கிழமை பிற்பகலுக்குப் பின் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
-
Delighted to have had the opportunity to talk about “Professionals In Politics”, a program conducted by @SMaRT4Bharat today in Coimbatore, and to share my views on the need for professionals in the political landscape in shaping the developed India of tomorrow envisioned by our… pic.twitter.com/ppVO2l7j3j
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 6, 2024
அதனைத்தொடர்ந்து, அனுமதி மறுத்த உத்தரவை, மறுபரிசீலனை செய்து புதிய உத்தரவை தேர்தல் அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டு இருந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி நேற்று பிற்பகல் இந்நிகழ்விற்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு வழங்கினார். புதிய உத்தரவில், “புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்தும் செலவுகள் பாஜக வேட்பாளரின் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி நிகழ்ச்சியானது, நேற்று மாலை 4.30 மணிக்கு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஊடகவியலாளர்கள் பத்ரி சேஷாத்ரி, ரமேஷ், ரங்கராஜ் பாண்டே, முரளி ஆகியோர் பங்கேற்று, "ஜடியா கால்டு மலை" என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் என இருமொழியிலும் வெளியிட்டனர்.