மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். ஆந்திராவில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களுக்காக அவர் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.
மார்ச் உடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலம் முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டியை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என திட்டமிட்டு சந்திரபாபு நாயுடு நாடகம் நடத்தி வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார்.
உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆளும் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சனாதனத்தின் படி பேசும் பவன் கல்யாண், அவர் வீட்டில் சனாதனத்தைக் கடைப்பிடிப்பதில்லை. லட்டு விவாகரத்தில் நடவடிக்கை எடுக்காமல் சந்திரபாபு நாயுடு நாடகம் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ஒன்பது பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது ஆந்திர அரசு!
மதத்தை வைத்து அரசியல் செய்கிறார். திருப்பதி லட்டில் எந்தவொரு கலப்படமும் இல்லை. தன்னுடைய மலிவான அரசியலுக்காகக் கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். லட்டு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சந்திரபாபு நாயுடு முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும். பவன் கல்யாண் எழுதிக் கொடுத்ததைப் பேசி வருகிறார்.
உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. தன்னுடைய சுய லாபத்துக்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார். தொடர்ந்து கடவுளை அவமதிக்கும் விதத்தில் பேசி வருகிறார். லட்டு வாங்கலாமா? இல்லை வேண்டாமா? எனக் குழப்பத்தைப் பக்தர்களுக்கு ஏற்படுத்திவிட்டனர். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தி இல்லை, கடவுள் மீது நம்பிக்கை இல்லை. மத்தியில் கூட்டணி ஆட்சியிலும், மாநிலத்தில் ஆட்சியிலும் உள்ள அவர், சகல அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேவையற்ற சர்ச்சைகளையும், குற்றச்சாட்டுக்களையும் நாள்தோறும் நடத்தி வருகிறார்" எனத் தெரிவித்தார்.