சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச்27) முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று (மார்ச் 28) தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் மனு மீதான பரிசீலனை, தேர்தல் நடத்தும் அதிகாரியால், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.
அந்த வகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுடைய மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனுவில் கையொப்பமிட்டு இருந்த நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சுரேஷ் என்பவருடைய உரிமம் காலாவதி ஆகிவிட்டதாகவும், காலாவதி ஆகிவிட்ட ஒருவரின் கையொப்பம் செல்லாது, அதனால், கலாநிதி வீராசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மீது 2011இல் கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை தற்போது அவர்கள் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது மனுவையும் நிறுத்தி வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டார்.
நிறுத்தி வைத்த மனுக்கள் மீதான விசாரணை மதியம் 12.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 12.45 மணிக்கு அந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் வழக்கறிஞர் சுரேஷ், தன்னுடைய உரிமத்தை திரும்பப் பெற ஏற்கனவே விண்ணப்பித்திருக்கிறார், அது நிலுவையில் இருக்கிறது, அதனால் அவர் கையொப்பமிட்டது செல்லும் என அதற்குரிய ஆவணங்களை திமுக வேட்பாளர் சமர்ப்பித்தார். அதனை ஏற்றுக்கொண்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த மனுவை ஏற்பதாக அறிவித்தார்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மீது இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மீது அந்த வழக்கு இல்லை என்றும், அதற்கு உரிய ஆவணத்தைத் தாக்கல் செய்ததால் அவர் மனுவையும் ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "விஜயுடன் இணைந்து பணியாற்றத் தயார்" என்ன சொல்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்..! - O P Ravindhranath About TVK