திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி மதீனா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. டீக்கடை நடத்தி வரும் இவருக்கு சாகிதா என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும், சையது கமால் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சிறிய வயதிலிருந்து பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வந்த சையது கமால், சிலம்பம், கால்பந்து, கராத்தே மற்றும் பல்வேறு போட்டிகளில் பத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ் மற்றும் கோப்பைகளை பெற்று அசத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சையது கமலுக்கு கீபோர்டு வாசிக்கும் ஆசை வந்ததாக கூறப்படுகிறது. இதனை தனது தந்தை சிக்கந்தர் பாஷாவிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக தனது மகனுக்கு கீபோர்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் சிக்கந்தர். இந்நிலையில் சையது கமால் எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் யூடியூப்பில் பார்த்து பார்த்து சிறிது சிறிதாக ஆர்வத்துடன் கீபோர்ட் வாசிக்க கற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், துணியால் கண்களை கட்டிக்கொண்டு தேசிய கீதம், சினிமா பாடல்களை வாசித்து அசத்தியுள்ளார். மேலும், புத்தம் புது காலை என்ற சினிமா பாடலை வாசித்துக் காட்டியும் அசத்தியுள்ளார். மேலும், காலை எழுந்தவுடன் சிலம்பம், கராத்தே கற்றுக்கொண்டும், பின்னர் பள்ளி சென்று கால்பந்திலும் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு கோப்பைகளையும், சான்றிதழையும் பெற்றுள்ள நிலையில், யூடியூப்பை பார்த்து பியானோ வாசித்து வரும் சையது கமாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!