சென்னை: சென்னை நங்கநல்லூர் ராம் நகர்ப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஸ்ரீ உக்ர குருவாயூரப்பன் கோயில் உள்ளது. இங்கு லேசான மழை பெய்தாலும் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து தேங்கி நிற்கும் அளவிற்குக் கோயிலானது சாலையை விட மிகத் தாழ்வாக உள்ளது.
மழை நீரானது தேங்குவதால் பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கோயிலை 5 அடி உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வட மாநில பணியாளர்களைக் கொண்டு ஜாக்கி மூலம் கோயிலை உயரப் படுத்தும் பணி கடந்த ஓர் ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நேற்று (பிப்.12) காலை 11 மணியளவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்கள் சிலர் ஓய்வு எடுப்பதற்காக அறைக்குச் சென்று உள்ளனர். அப்போது திடீரென கோயில் பிரகாரத்தின் ஒருபுறம் சுவர் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிராம் (21) என்பவர் படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட சக பணியாளர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று (பிப்.13) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: காதலர் தினம்; ஓசூரிலிருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 60% குறைவு..!