தூத்துக்குடி: காணமால் போன சிறுவன் அதிகாலையில் சடலமாக கிடைத்த சம்பவம் ஊரையே உறைய வைத்துள்ளது. நோய் வாய்ப்பட்ட மகன் எப்படி இறந்தான் என தெரியாமல் பெற்றோர் குமுறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் கார்த்தி-சுந்தரி தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
மூத்த மகன் மணிகண்டன் 7 ம் வகுப்பும், இரண்டாவது மகன் கருப்பசாமி 5ம் வகுப்பும் அப்பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கருப்பசாமி வீட்டிலேயே இருந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், தனியாக இருந்த கருப்பசாமி விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாயமாகி விட்டதாகவும், மாயமான சிறுவனின் கழுத்தில் நகை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் பதறிய பல்லடம்... வீட்டில் சடலமாக கிடந்த கணவன், மனைவி.. கதறும் பிள்ளைகள்..!
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பள்ளி மாணவன் மாயமானது குறித்து உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் போலீசார் என தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டு கதறி அழுதனர்.
மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,. கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.