திண்டுக்கல்: பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சியில் மூன்றரைக் கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9.5 கோடி மதிப்பில் 27 ஏக்கரில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்குப் பூமி பூஜை விழா இன்று (பிப்.25) நடைபெற்றது.
இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். இதே போல் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எழுகாம்வலசு கிராமத்திற்குப் புதிதாகப் பேருந்து சேவையை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தேசிய, மாநில அளவில் விளையாட்டுத் துறையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனச் சமூக நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை வெளியிட்டுள்ளார்.
இரண்டு தளங்களில் தங்கும் வசதி, சமையலறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு புதிதாகக் கட்டப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் வரும் டிசம்பர் மாதம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!