சென்னை: சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூரில் அருணா ஆர்செரி அகாடமி சார்பில் அம்பு எய்தல் உலக சாதனை போட்டி நடைபெற்றது. இதில் 12 சிறுவர், சிறுமிகள் பங்கேற்று 12 நிமிடங்களில் ஒவ்வொருவரும் தலா 144 அம்புகளை எய்து உலக சாதனை படைத்தனர்.
அம்புகளை எய்வதற்கு முன்னர் பலூன்களை உடைத்து சிறுவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். சாதனை படைப்பதற்கு முன்பு அனைத்து சிறுவர்களும் தங்கள் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
சிறுவர்கள் தொடர்ச்சியாக அம்புகளை எய்ததால் சோர்வடைந்த நிலையில் அங்கு இருந்த பெற்றோர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் கைகளைத் தட்டியும், கரவொலி எழுப்பியும், ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: உலக கோப்பை வீராங்கனைகளுக்கே டஃப் கொடுத்த நெல்லை சிங்க பெண்கள்.. தோற்ற அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்த போட்டியில் 12 சிறுவர்களும் சேர்ந்து 12 நிமிடங்களில் மொத்தம் 1728 அம்புகளை எய்தனர். அவர்கலது இந்த சாதனை உலக இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் 12 சிறுவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் உலக இளம் சாதனையாளர்கள் புத்தகத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவர் சிறுமியர் உலக சாதனை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும், தங்களை தயார் செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் அனைத்து மாணவர்களும் தங்கள் வாழ்வில் சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆர்வம் ஒன்று இருந்தாலே போதும் என தெரிவித்தனர்.