ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனாகவும் இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி.
தற்போது 43 வயதை தாண்டிய போதும் தோனி தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இருப்பினும் கால் மூட்டு வலி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சீசனில் தோனி பேட்டிங் செய்வதை அரிதாக காண முடிந்தது. விக்கெட் கீப்பிங்கில் மட்டும் முழுக் கவனம் செலுத்திய தோனி, தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டு விளையாடினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற விதி இருப்பதால் தோனியை அந்த பிரிவில் மாற்ற சென்னை அனி நிர்வாகம் திட்டமிட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தோனி முடிவெடுத்ததாக தகவல் கூறப்பட்டது.
மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் விதி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்படி தோனியை இம்பேக்ட் வீரராக எடுத்துக் கொள்ள சென்னை அணி பிசிசிஐயை நாடியது.
Major Missing 🥹💛#WhistlePodu #Yellove pic.twitter.com/y2dlSAmKs8
— Chennai Super Kings (@ChennaiIPL) September 11, 2024
இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு வெளியானது. இந்த சூழலில் தோனி வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ட்விட் போட்டுள்ளது.
அந்த ட்விட்டில் "மேஜர் மிஸ்ஸிங்" என்று கேப்ஷன் பதிவிட்டு தோனியின் 7வது நம்பர் ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவுட்டுள்ளது. சென்னை அணியின் இந்த ட்விட் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தோனி ஓய்வு பெறப்போவதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த கூட்டம் தோனியால் மட்டுமே தவிர இனி அவ்வளவு பெரிய கூட்டம் வராது என்றும் கருத்துக்களை ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் தோனி ஓய்வு பெறும் நாளை தங்களால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? தமிழக வீரர்கள் ஆதிக்கம்! - Hungary Chess Olympiad 2024