பேங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சினின் 37 வயது மகள் பேடோங்டர்ன் ஷினவத்ராவை தாய்லாந்து மன்னர் இன்று முறைப்படி நியமித்தார்.
தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஸ்ரெத்தா தவிசின் தனது அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்ற வழக்கறிஞரை நியமித்தார். இவர் ஏற்கனவே குற்ற வழக்கில் சிறைக்கு சென்றவர். இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சரவையில் நியமித்ததற்கு கடும் சர்ச்சை கிளம்பியது.
இதுகுறித்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், பிச்சித் சைபான் குற்ற பின்னணி கொண்டவர் என தெரிந்தும் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி அமைச்சரவையில் நியமித்ததாக ஸ்ரெத்தா தவிசினை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, ஆளுங்கட்சியினான பியூ தாய், புதிய பிரதமரை தேர்தெடுக்க கூட்டணி கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியது. அதில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சினின் 37 வயதான மகள் பேடோங்தரன் ஷினவத்ரா பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று அவர் அதிகாரபூர்வமாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிகழ்வின்போது, உரையாற்றிய பேடோங்தரன் ஷினவத்ரா, ''நாட்டின் பிரதமராக நான் திறந்த இதயத்துடன் பணியாற்றுவேன். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து யோசனைகளையும் கேட்க நான் எப்போதும் தயாராக இருப்பேன். சக தாய்லாந்து மக்களே, நாட்டு வளர்ச்சிக்கான இந்த கடைமையை பிரதராமரால் மட்டுமே செய்ய முடியாது. அனைத்து தலைமுறையினரின், அனைத்து திறமையான மக்களின், அமைச்சரவை, கூட்டணி, அரசு ஊழியர்கள், தனியார் துறை என அனைவரது பங்களிப்பும் வேண்டும்'' என்றார்.
பேடோங்தரன் ஷினவத்ரா புதிய பிரதமராக பொறுப்பேற்றபோது அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்சின் (75) முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். அவரோடு, ஷினவத்ராவின் கணவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 60 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தவிக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நாசா கூறுவது என்ன?